ஜூன் 30 ல் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்

Jun 18, 2026 - 19:10
 0  28
ஜூன் 30 ல் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்

வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பை ஏற்க மறுத்து ஜூன் 30 ல் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்

மத்திய அரசின் கொள்கைக்கும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலுக்கு முரணாக வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பை ஏற்க மறுத்து ஜூன் 30 ல் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத் தலைவர் பிஆர் பாண்டியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ;

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு சென்னை மண்டல தலைவர் இராஜசேகர் தலைமையேற்றார். கூட்டத்தில் பி ஆர் பாண்டியன் பங்கேற்று விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து எடுத்துரைத்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் உர விலை ஏற்றம் தீவிரம் அடைந்து வருகிறது. தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இணை இடுபொருள் வாங்கினால் தான் உர விநியோகம் செய்ய முடியும் என்று தனியார் கடைகள் மறுக்கின்றனர். எனவே இது குறித்து மத்திய அரசு உர உற்பத்தி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இணை இடுபொருள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். 

திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அரசு புறம்போக்கு நிலத்தில் மட்டும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்து. கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். கொசஸ்தலை - ஆரணி ஆறுகளை இணைத்து கடலில் கலக்கும் உபரி நீரை பயன்படுத்த முன் வர வேண்டும். 

தமிழக அரசு கூட்டுறவு கடன் தள்ளுபடியில் தொடர்ந்து குளறுபடிகள் நிலவுகிறது. குறிப்பாக மத்திய அரசு கொள்கை முடிவின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை பின்பற்றி நிலத்தின் அளவை மையமாக வைத்து தான் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மாறாக தொகையை மையமாக வைத்து தள்ளுபடி செய்வது முரணானது. ஏற்கனவே தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் முதல் கையெழுத்தாக ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே கடன் தள்ளுபடி செய்த வரலாறு உள்ளது. 

குறிப்பாக 2.1/2ஏக்கர் வரையிலும் குறு விவசாயிகள் எனவும்,5 ஏக்கர் வரையிலும் சிறு விவசாயிகள் எனவும் மத்திய அரசு கொள்கை முடிவெடுத்து அதற்கான கடன் தொகை 3 லட்சமாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது தற்போது தமிழ்நாட்டில் 1.50லட்சம் வரைதான் கடன் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே, தங்களுடைய அறிவிப்பின்படி 75,000 வரையிலுமான கடன் முழுமையும் தள்ளுபடி செய்யப்படும். அதற்கு மேலான கடனுக்கு ௹35,000 ம் என அறிவித்திருப்பது எந்த வகையிலும் தேர்தல் அறிவிப்பில் கொடுத்த வாக்குறுதிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவுக்கும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலுக்கும் முரணாக உள்ளது.

எனவே, உடனடியாக நிலத்தின் அளவை கணக்கில் வைத்து சிறு குறு விவசாயிகளுக்கு 100% வரை கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.நெல் குவிண்டால் 1க்கு ௹3500 வழங்கி செப்டம்பர் 1 முதல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜூன் 30-ம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் 38 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் பெருமளவில் பங்கேற்க இருக்கிறார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் இப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டுகிறோம் என்றார்.

 செய்தியாளர் சந்திப்பின்போது மாநில பொதுச்செயலாளர் வி. கே.வி.துரைசாமி, மாநிலத் துணைச் செயலாளர் விஜய் பிரசாத், மலைவாழ் விவசாய சங்க தலைவர் ஏற்காடு ராமர், சென்னை மண்டல செயலாளர் சீனிவாசன், திருவாரூர் மாவட்ட கவுரவத் தலைவர் செல்வராஜ், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஹரிதாஸ் /திருவண்ணாமலை மாவட்ட தலைவர் நாராயணன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சண்முகம், திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் மோகன கிருஷ்ணா, மாவட்ட பொருளாளர் ஜி.அகத்தீஸ்வரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0