ஒன்றிய ரயில்வே அமைச்சரின் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
ஒன்றிய ரயில்வே அமைச்சரின் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தர தாமதப்படுத்துவதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை மத்திய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளதாக, மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; பிரமதருக்கு தமிழக முதல்வர் அண்மையில் எழுதிய கடிதத்தில், ‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். ஆனால், ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தரவில்லை என்று உண்மைக்குப் புறம்பான தகவல்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் 148.65 ஹெக்டேர் பரப்பு கொண்ட 7 ரயில் திட்டங்களுக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி, 2 பெரிய திட்டங்களுக்கு 128.41 ஹெக்டேர் பரப்பில், 73.65 ஹெக்டேர் நிலம் எடுப்புப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதில், மொரப்பூர்- தர்மபுரி புதிய அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு 78.11.38 ஹெக்டேர்ஸ் பரப்புள்ள நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் 45.00.85 ஹெக்டேர்ஸ் பரப்புள்ள நிலங்களில் நில எடுப்பு முடிக்கப்பட்டுள்ள நிலையில், 4 கிராமங்களில் 24.78.77 ஹெக்டேர்ஸ் பரப்புள்ள நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ள காரணத்தினால், மாற்று வழித்தடம் அமைத்திட பரிசீலனையில் உள்ளதாக ரயில்வே துறையினரால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரயில்வே துறையினரால் தொழில் நுட்ப முடிவிற்கேற்ப திருத்திய நிலத்திட்ட அட்டவணை 4 கிராமங்களுக்கு ரயில்வே துறையினரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நில எடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையிலான 51 கி.மீ ரயில் பாதை மற்றும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை இடையிலான 41 கி.மீ. ரயில் பாதை திட்டங்களுக்கு தற்போதைய நில மதிப்பின் அடிப்படையில் அரசளவில் அனுமதி வழங்கும் பொருட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. ரயில் பாதை அமையவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களைப் பொறுத்தவரையில், மேற்படித் திட்டங்களைச் செயல்படுத்த எந்தவிதமான தடைகளும் இன்றி அவ்வப்போது அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு அரசு நிலங்கள் ரயில்வேதுறைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்- கன்னியாகுமரி இடையே அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்கத் தேவையான ரூ.298.78 கோடி நிதியை மத்திய ரயில்வேதுறை வழங்கவில்லை. தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.739.31 கோடி மட்டுமே நிதி வழங்கியதால், நிலம் எடுப்பதில் சிரமம் உள்ளது.
தமிழகத்தில் 2,500 ஹெக்டேர்: நிலம் எடுக்க தமிழக அரசு நிர்வாக அனுமதி தந்த நிலையில், 931.52 ஹெக்டேர் நிலங்களுக்கு ரயில்வே நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்தில் 19 ரயில்வே திட்டங்களுக்கு தேவையான 1,273 ஹெக்டேர் பரப்பு நிலங்களில், 1,198 ஹெக்டேர் நிலமெடுப்பு பணிகள் முடிந்து 94 சதவீதம் நிலம் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்படி நிலங்கள் ஒப்படைத்ததை சொல்லாமல், ஏதோ முழுவதுமாக புறக்கணிப்பதுபோல மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என ரயில்வே துறை 2020 ஜூலை 24-ம் தேதி திருவண்ணாமலை ஆட்சியருக்கு கடிதம் எழுதிய நிலையில், அந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என ரயில்வே அமைச்சர் கூறுகிறார்.
தூத்துக்குடி - மதுரை இடையேயான திட்டத்தையும் தமிழக அரசு கைவிடக் கோரியதாக ஆதாரமின்றி ஒரு செய்தியை கூறியுள்ளார். தனுஷ்கோடியில் ரயில் திட்டம் செயல்படுத்தினால் அப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்களின் சூழலியல் பாதிக்கப்படும் என்பதால் அதைக் கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் கடிதம் எழுதிய நிலையில், அதைக் குறிப்பிடாமல், அந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மதுரை – அருப்புக்கோட்டை ரயில் பணிகள் தமிழ்நாடு அரசு நிறுத்த கூறியதாக உண்மைக்கு மாறான செய்திகளை ரயில்வே அமைச்சர் கூறுகிறார். நிதியை ஒதுக்காமல் வார்த்தைகளை மட்டும் செலவிடும் பிரதமர் போலவே ரயில்வே அமைச்சரும் உள்ளார்.
எனவே ரயில்வேதுறையின் திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நிலமெடுப்பு செய்து விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. ரயில்வே துறைக்கு நிலங்கள் வழங்கப்படவில்லை என்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. இப்படி அவர் சொல்லும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பாக உள்ளன. தமிழக முதல்வர், பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு முறையான பதில் இல்லாமல், தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகிறார்.
ரயில்வே திட்டங்களுக்கு அறிவிப்பு வழங்கிவிட்டு நிலம் கையகப்படுத்த உரிய நிதியை ஒதுக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு அறிவிப்பு மட்டும் வெளியிடுகிறார்கள் நிதி ஒதுக்குவதில்லை. ஒன்றிய அமைச்சர் கூறும் செய்திகள் அரசியல் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒன்றிய அரசு பாராமுகமாக செயல்படுகிறார்கள். ஒன்றிய நிதி நிலைக்கு அதிக பங்களிப்பு செய்வது தமிழ்நாடு அரசின் நிதி நிலை தான்.
முதலமைச்சரின் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் முழுமையாக பதில் கூற வேண்டும், ஏதாவது தடங்கல் இருந்தால் அதையும் முதலமைச்சர் சரி செய்து வருகிறார். தமிழ்நாட்டின் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்தி விட்டு ஆதாராத்தோடு பதில் அளிக்க வேண்டும்.
டபுள் இன்ஜின் இருக்கக்கூடிய உத்திரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நிலை அனைவருக்கும் தெரியும். டபுள் இன்ஜின் இருக்கக்கூடிய மாநிலங்களில் பொருளாதார நிலையையும், தமிழ்நாட்டின் பொருளாதார நிலையையும் ஒப்பிட்டு பார்த்தால், டபுள் இன்ஜின் என்பது ஏமாற்று வேலை என்பது தெரியும்.
ஒன்றிய அரசோடு இணக்கமாக செயல்பட்டால் தான் நிதி ஒதுக்கப்படும் என கூறுவது தான் பாசிசம். ஒரே நாடு ஒரே கட்சி என்கிற நிலைக்கு செல்வதற்கு தான் நிதியை ஒதுக்காமல் ஒன்றிய அரசு மிரட்டுகிறார்கள். அந்த மிரட்டல்களைளயும் தாண்டி பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், ரயில்வே துறை முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது அதற்கான நிதியை முழுமையாக அவர்கள் தான் ஒதுக்க வேண்டும்.
அந்த அந்த மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கை. ஆனால், வரியை மட்டும் பெற்றுக்கொண்டு, ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் இருக்கிறார்கள். அதை போராடி பெற வேண்டிய சூழலில் தான் நாம் இருக்கிறோம். போராடியதால் தான் சுதந்திரமே கிடைத்தது. ஏற்கனவே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளோம். நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வோம்.
தமிழ்நாட்டிற்கு தேவையானவற்றை கேட்டு பெற முதலமைச்சரே நேரில் பிரதமரை சென்று சந்தித்துள்ளார். அப்பொழுதும் அவர்கள் நாம் கேட்கும் நிதியை ஒதுக்குவதில்லை, தினமும் அவர்களிடம் கையேந்தி நிற்க முடியாது.
நிர்வாக திறமையின்மையால் தான் தமிழ்நாடு அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பதாக எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அவர் ஆட்சியில் தான் நீட் கொண்டு வரப்பட்டது,, உதய்மின் திட்டம் கொண்டுவரப்பட்டது, மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி.
சிறந்த நிர்வாக திறமை இருப்பதால் தான் நிதி நெருக்கடிகள் இருந்த போதும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். நம்முடைய மாநிலத்திற்கும் வளர்ச்சிக்கு என்ன தேவையோ அதனை முதலமைச்சர் தொடர்ந்து செயல்படுத்தி தான் வருகிறார்.
ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை 12ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0