மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசுடன் இணைந்து சட்டப்போராட்டம் - காவிரி தனபால்
மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசுடன் இணைந்து சட்டப்போராட்டம் - காவிரி தனபால்
மேகதாது அணை கட்டுமானத் திட்டத்தைத் தடுப்பது குறித்து, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் திருச்சியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் காவிரி தனபாலன் தெரிவித்ததாவது :--
மேகதாது அணை விவகாரத்தை சட்டப்பூர்வமாக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளில், அணை கட்டுமானத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது.
தற்போது, தொழில்நுட்ப ரீதியாகவும், காவிரி நதிநீர் தரவுகள் அடிப்படையிலும், தமிழகத்திற்கு ஆதரவான அனைத்து ஆவணங்களையும் திரட்ட ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தத் தரவுகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வலுவான சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் என்பதால், தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கோடு, விவசாயிகள் தரப்பில் திரட்டப்படும் தரவுகளையும் இணைத்து வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அரசின் சட்டக் குழுவிற்குத் தேவையான கூடுதல் ஆதாரங்களை வழங்கி, மேகதாது அணை கட்டப்படுவதைத் தடுப்பதில் முழு ஒத்துழைப்பை வழங்குவோம். இதன் மூலம் 19 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி மக்களின் குடிநீர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0